Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: பணிக்காலம முடிவடைவதால் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசு அனுப்பிய கடிதத்திற்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் பதிலளித்துள்ளார். அதில், நீதிமன்ற அனுமதியில்லாமல் ஆவணங்களை ஒப்படைக்க தனக்கு அதிகாரம் இல்லை எனக்கூறியுள்ளார்.
சேலம் எஸ்.பி., - உளவுத்துறை டி.ஐ.ஜி., - ரயில்வே, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, டி.ஐ.ஜி., மற்றும், அதே பிரிவுகளில், ஐ.ஜி.,யாக பணியாற்றி, 2018 நவ., 30ல், ஐ.பி.எஸ்., அதிகாரி என்ற நிலையில் ஓய்வு பெற்றார்.
அன்றே, சென்னை உயர் நீதிமன்றம், இவரை ஓர் ஆண்டுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமித்தது. அதன்படி, பொன் மாணிக்கவேலின் பணிக்காலம், இன்றுடன் (நவ.,30) நிறைவு பெறுகிறது.
இந்நிலையில், பணிக்காலம் முடிவடைவதால், ஆவணங்கள் மற்றும் விசாரணை அறிக்கைகளை இன்றைக்குள் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதற்கு பதிலளித்து பொன்.மாணிக்கவேல் எழுதிய கடிதம்: தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு தனக்கு பொருந்தாது. சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க என்னை நீதிமன்றம் தான் நியமித்தது. இதனால், அரசின் உத்தரவு தனக்கு பொருந்தாது.
சிலை கடத்தல் வழக்கை விசாரிக்க சிறப்பு அதிகாரியாக உயர்நீதிமன்றம் நியமித்ததை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது. நீதிமன்றம் உத்தரவின்றி ஆவணங்களை ஒப்படைக்க எனக்கு அனுமதியில்லை. வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளதால், தீர்ப்பு வரும் வரை அரசு காத்திருக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.